வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. ஜெயச்சந்திரன் இளையபெருமாள் அவர்கள் 12 ஜூன் 2026 அன்று இறைவனடி சேர்ந்தார். அவருடைய ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.
ஒரு குடும்பத்தின் வரலாறு சில நேரங்களில் ஒரு சமூகத்தின் வரலாறோடும் கலந்துவிடுகிறது. ஜெயச்சந்திரன் மாமாவின் வாழ்க்கையும் அப்படிப்பட்டதுதான்.
1986 ஆம் ஆண்டு "வடமராட்சி லிபரேஷன் ஒப்பரேஷன்" என்ற பெயரில் இலங்கை இராணுவம் வடமராட்சிப் பகுதிக்குள் நுழைந்து கொண்டிருந்த காலம் அது. அந்த நேரத்தில், கப்பல் பணியில் இருந்த ஜெயச்சந்திரன் அவர்கள், கனடா - வான்கூவரில் நடைபெற்ற 1986 World Expo நிகழ்வில் பங்கேற்றுக் கொண்டிருந்தார். தாயகத்தில் நடந்த இடம்பெயர்வுகளும், உறவுகளுடன் தொடர்பு கொள்ள முடியாத அந்த அச்சமூட்டும் சூழலும், இறுதியில் அவரை கனடாவில் தஞ்சம் அடைய வைத்தது.
அவர் கனடாவுக்கு வந்த முதல் "தலைமுறை" தமிழ் அகதிகளில் ஒருவர். இலங்கையில் அரசுப் பணியில் Survey Department Draftsman ஆக பணிபுரிந்த இருந்த அவர் ஒய்வு பெற்று , புதிய வாழ்க்கையை மீண்டும் கனடாவில் தொடங்க வேண்டியிருந்தது.
வான்கூவரிலிருந்து டொராண்டோவுக்கு வந்து, அப்போது உருவாகிக் கொண்டிருந்த கனடியத் தமிழ் சமூகத்துடன் இணைந்து அதை கட்டியெழுப்பியவர்களில் ஒருவராக மாறினார்.
கனடிய குடியுரிமை பெற்றதோடு நிற்காமல், டொரோண்டோவில் உள்ள Novotel hotel இல் Maintenance Engineer தனது ஆரம்ப வேலையை தொடர்ந்து அதில் பதவி உயர்வும் பெற்றார்.
இந்த நாட்டிற்கு பயனுள்ள குடிமகனாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு George Brown College-ல் தனது டிப்ளோமா படிப்பைத் தொடர்ந்தார். அதன் பின்னர் Marc Garneau Collegiate Institute பாடசாலையில் "Caretaker Engineer"ஆகப் பணியில் இணைந்தார்.
1990களில் தொடங்கிய அந்தப் பணி, அவரது ஓய்வு பெறும் வயது வரை தொடர்ந்தது. வாரத்தில் ஏழு நாட்கள் உழைப்பதை அவர் ஒருபோதும் சுமையாகக் கருதவில்லை.
அவருக்குப் பெருமையாக இருந்த ஒரு நினைவு எப்போதும் இருந்தது. கனடாவிலிருந்து விண்வெளிக்குச் சென்ற முதல் நபரான Marc Garneau அவர்களின் பெயரைத் தாங்கிய பாடசாலையில் பணியாற்றிய அவர், ஒருமுறை Marc Garneau நேரில் வருகை தந்தபோது அவரைச் சந்தித்து பாராட்டுடன் ஒரு கையொப்பத்தையும் பெற்றிருந்தார். அந்தச் சிறிய நிகழ்வை அவர் எண்ணற்ற முறை சொல்லியிருப்பார். வாழ்க்கையில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கூட பெரிய வெற்றியாகக் கொண்டாடத் தெரிந்தவர் அவர்.
அதே Marc Garneau அவர்களுடனான இன்னொரு நினைவு அவருக்கு மிகவும் நெருக்கமானது. 2004 ஆம் ஆண்டு Carleton University-யில் நடைபெற்ற தனது மகள் ஜெயகௌரி ஜெயச்சந்திரனின் பட்டமளிப்பு விழாவில், அப்போது Chancellor ஆக இருந்த Marc Garneau அவர்களிடமிருந்தே தனது மகள் பட்டத்தைப் பெற்றுக் கொண்டதை நேரில் கண்டு அவரோடு உரையாடி மகிழ்ந்தார்
அதனால்தான் எல்லோரும் அவரை அன்போடு "ஓமடி மாமா" என்று அழைத்தார்கள். யார் கதையாயினும் பொறுமையாகக் கேட்பார். கேட்டதை நகைச்சுவையோடும் சுவையோடும் மற்றவர்களிடம் பகிர்வார். அவருடன் சில நிமிடங்கள் பேசினாலே மனம் லேசாகிவிடும் என்பார்கள் நம் ஊரவர்கள் . கடந்த 40 வருடங்களாக டொரோண்டோவில் நடைபெறும் அணைத்து இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னை அதில் புதிப்பித்துக்கொள்வார்
1989 ஆம் ஆண்டு நடைபெற்ற வல்வை படுகொலையின் போது அப்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்த வல்வெட்டித்துறை மக்களிடம் வீடு வீடாகச் சென்று நிதி திரட்டி அனுப்பியவர்களில் அவர் முக்கியமானவர். அந்த காலத்தில் இவரிடம் கார் இருக்கவில்லை , கைத்தொலைபேசிகள் இருக்கவில்லை , பேரூந்தில் பயணம் செய்து வீடு வீடாக சென்று பணம் சேகரித்து 'உடனடியாகவே " வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவுக்கு " ($ 9,250.00) அனுப்பி வைத்ததுமல்லாமல் அதன் கணக்கறிக்கையை அனைவருக்கும் தபால் மூலம் அனுப்பிவைத்தார் . ( அந்த 37 வருடத்துக்கு முற்படட கணக்கஅறிக்கை இத்துடன் ஒரு ஞாபக பதிவுக்காக இணைக்கப்படுள்ளது )
பின்னாளில் கனடா வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் உருவாக வழிவகுத்த முயற்சிகளில் இதுவும் ஒன்று. ஆரம்பகால வல்வெட்டித்துறை நலன் புரிச்சங்கத்திலும் தலைவர் , செயலாளராக பதவிவகித்ததுடன் , சங்க நடவடிக்கைகளிலும் அவர் தீவிரமாகச் செயல்பட்டார். இவ்வாறான செயல்பாடுகள் வல்வை மக்களை ஒன்றிணைக்கவும் , தாயகத்துடன் பிணைக்கவும், அதிக மக்கள் இங்கு புலம்பெயர காரணமாகவிருந்தது.
1990களின் தொடக்கத்தில் ஒரு கேமராவைத் தூக்கிக்கொண்டு திருமணங்கள், சமூக நிகழ்வுகள் என எங்கு அழைத்தாலும் செல்வார். புகைப்படம் எடுத்து, அவற்றை ஆல்பமாகத் தயாரித்து குடும்பங்களிடம் வழங்குவதை ஒரு சேவையாகவே செய்தார். அது அவர் தன்னை புதிப்பித்து மகிழ்ச்சியாக வைத்திருந்தார்
2012 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறை கனடா முத்துமாரி அம்மன் ஆலயத்தை உருவாக்கும் பணியில் ஆரம்ப பணியிலேயே தனது கோயில் தர்மகர்த்தா நண்பர் ராஜ்குமார் அவர்களுடன் தோளோடு தோள் நின்று உழைத்தவர், கோயில் கட்டுமான பணியில் தனது முழு உழைப்பையும் , கட்டுவதற்க்கான தன்னம்பிக்கையும், நிதியையும் கொடுத்து தொடர்ச்சியாக இறுதிக்காலம் வரை பயணித்தவர் .சுமார் ஐந்து ஆண்டுகள் கனடா வல்வை முத்துமாரி அம்மன் கோயிலின் நிர்வாகத்தில் தன்னார்வத் தொண்டராக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். கோயில் இரண்டு தரப்புகளாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட காலங்களிலும் கூட, எந்தத் தரப்பினராலும் அவர்மீது விரல் சுட்ட முடியவில்லை. எல்லோராலும் மதிக்கப்பட்ட சில மனிதர்களில் அவர் ஒருவர்.
எப்போதும் சிரித்த முகம். நேர்மறையான எண்ணங்கள். புதிதாக கனடா வந்தவர்களை வரவேற்று, இங்கே எப்படி வாழ்க்கையை ஆரம்பிப்பது என்று வழிகாட்டுவது. பலருக்கு குடியேற்ற வாழ்க்கையின் முதல் படிகளை எடுத்து வைக்க உதவியது போன்ற சேவைகளை அவர் அமைதியாகச் செய்திருக்கிறார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரை "ஓமடி மாமா " என்று செல்லமாக அழைப்பார்கள் , அவர் எல்லாருக்கும் ஓம் டி என்று சொல்லுவதாலும் , எல்லாருடனும் இசைந்து போவதாலும் அவ்வாறு அழைப்பார்கள் . யாரிடமும் வேறுபாடு பார்க்காமல் இலகுவாக பழகும் குணம், எல்லோருடைய கருத்துகளையும் பொறுமையாகக் கேட்கும் மனப்பான்மை, அனைவரையும் மதித்து நடக்கும் பண்பு ஆகியவற்றாலேயே அவர் அந்தப் பெயரால் சமூகத்தில் அறியப்பட்டார்.
உண்மையில் அவரது இயற்பெயரை விட “ஓமடி மாமா” என்ற பெயரே பலருக்கும் மிகவும் பரிச்சயமானது. எல்லாருக்கும் "ஓம்" போட்டு முகத்தில் புன்னகையுடன் அனைவரையும் அரவணைத்து வரவேற்கும் அவரது அன்பான உருவமே பலரின் நினைவுக்கு வரும். அவருடைய எளிமையும், மனிதர்களை இணைக்கும் இயல்பும் அந்தப் பெயரை சமூகத்தில் ஒரு தனித்த அடையாளமாக மாற்றியது.
ஊரவரால் அறியப்பட்ட அவரது தந்தையர் இளையபெருமாள் அப்பா , உருவாக்கிய " ஜெயா லைட் என்ஜின் " பாரம்பரியத்தை இங்கேயும் நிலைநாட்ட தவறவில்லை , வல்வை கனடா முத்துமாரி அம்மன் லைட் எலெக்ட்டிகள் வேலைகளை தானே முன்னின்று நடத்துவார் .
உண்மையில், வாழ்க்கையில் கிடைக்கும் சிறிய மகிழ்ச்சிகளைக் கூட மனதார ரசித்து, அதை பிறருடன் பகிர்ந்து கொண்டாடுவது எப்படி என்பதைக் அவரிடமிருந்தே பலர் கற்றுக்கொள்ளலாம்.
அன்பு, எளிமை, மனிதநேயம் ஆகியவற்றால் பலரின் மனங்களில் இடம்பிடித்த அவர், சென்ற இடமெல்லாம் இனிய நினைவுகளையும் நல்ல உறவுகளையும் விட்டுச் சென்றுள்ளார்.
அவரது நினைவுகள் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும், அவரை அறிந்த சமூகத்தினரிடமும் என்றும் நிலைத்திருக்கும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை மனமாரப் பிரார்த்திக்கின்றோம்.
கனடா வல்வெட்டித்துறை நலன் புரிச்சங்கம்
16 ஜூன் 2026
In Loving Memory of Mr. Jayachandran Ilayaperumal ("Omadi Mama")
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.