வல்வை நகரசபை சைக்கிள் வசம் - தவிசாளராக திருமதி தவமலர், முதன்முறையாக பெண் தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2025 (புதன்கிழமை)
வல்வை நகரசபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான கூட்டம், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தலைமையில் இன்று 18.06.2025 காலை 8.30 மணிக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய பகிரங்கமாக, வல்வை நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நடைபெற்று முடிந்த வல்வை நகரசபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காதலால், இடம்பெறவுள்ள கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்றது.
வாக்கெடுப்பின் முடிவில் தமிழ் தேசிய பேரவை (Tamil National Forum) 7:6 என்ற கணக்கில் ஒரு மேலதிக வாக்கால் பேரவை வெற்றி பெற்றது.
தவிசாளராக ஓய்வு பெற்ற அதிபர் திருமதி தவமலர் சுரேந்திரனாதன் தெரிவு செய்யப்பட்டார். மயிலையதனையைச் சேர்ந்த திருமதி தவமலர் அவர்கள், வல்வை மகளிர் கல்லூரியின் முன்னார் அதிபர் ஆவார்.
வல்வை நகரசபை வரலாற்றில் பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதித் தவிசாளராக திரு. நாகதம்பி பத்மநாதனும் தெரிவுசெய்யப்பட்டார்.
தேசிய மக்கள் சக்தி யாழில் இதுவரை இடம்பெற்ற தவிசாளர் தேர்வில் நடுநிலை வகிக்கத்துள்ளது. எதிர்பார்த்தது போலவே வல்வை நகரசபை தவிசாளர் தெரிவில் நடுநிலை வகித்ததால், இங்கு திரு.சிவாஜிலிங்கத்தை தலைமையாகக் கொண்ட தமிழ் தேசிய பேரவை (சைக்கிள்) வெற்றிபெற்றுள்ளது.
மொத்தமாக 16 உறுப்பினர்களைக் கொண்ட வல்வெட்டித்துறை நகராட்சிக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 7 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 5 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
தவிசாளர் பதவிக்காக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமதி. தவமலர் சுரேந்திரநாதனுக்கு 7 பேரும் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சட்டத்தரணி மகாலிங்கம் மயூரனுக்கு 6 பேரும் ஆதரவு வழங்கினர். தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 3 பேரும் நடுநிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன், மனித உரிமை செயற்பாட்டாளர் டோமினிக் பிறேமானந், கரவெட்டி பிரதேச சபையின் உபதவிசாளர் தியாகராசா தயாபரன் மற்றும் கட்சிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நகராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.